728 X 90 Ad slot

Thursday, June 30, 2011

TN Police "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் யார், யார்?

Tamil Nadu Police Hit List - 35 VIPs

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஐந்தாண்டுகளில் நிலம் அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்களின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அந்தந்த மாவட்ட எஸ்.பி.,கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இப்பட்டியலை தயாரித்து, பல முறை ஆய்வு செய்தபின், ஐ.ஜி., அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய நிலங்களை அபகரித்தவர்கள், ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலங்களை அபகரித்தவர்கள் என, பட்டியல் இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரிஅதிபர், அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர், மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏ.,கள் உள்பட 35 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நபர்களின் கடந்த கால செயல்பாடு, குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு, பினாமி பெயரிலான சொத்து மதிப்பு குறித்து ரகசிய விசாரணை நடக்கிறது.

நிலம் அபகரிப்பு பட்டியலில் உள்ளவர்களின் விபரம்:மாஜி எம்.எல்.ஏ., மகன்: கோவை நகரிலுள்ள பொன்னையராஜபுரத்தில் வசிப்பவர் ஆனந்தன்(42). கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரான இவர், மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். "Green Home Landscape ' என்ற பெயரிலான ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் இவர், பண்ணை வீட்டுமனை வழங்குவதாக கூறி ஸ்ரீசர்மா என்பவரிடம் மோசடி செய்த வழக்கில், மாநகர போலீசார் நேற்று முன் தினம் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது பெயரும் கோவை மாவட்டத்தில் நிலம் அபகரிப்பு குற்றத்தில் ஈடுபட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சில விவசாயிகளை மிரட்டி பல ஏக்கர் நிலத்தை அபகரித்து, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் இவரை கைது செய்வதற்கான ஆதாரங்களை, கோவை மாவட்ட போலீசார் திரட்டிவந்த நிலையில்தான், மாநகர் போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: மேட்டுப்பாளையம் அருகில் 8 ஏக்கர் விவசாய நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், மேலும் சில நில அபகரிப்புகளில் தொடர்பு இருப்பதாகவும் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மாஜி அமைச்சர் ராஜா: ஈரோட்டைச் சேர்ந்த மாஜி அமைச்சர் என்.கே.கே.பி., ராஜா மீது, நிலம் அபகரிப்பு வழக்கு கடந்த 2008ம் ஆண்டில் பெருந்துறை போலீசில் பதிவு செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் ராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இவரது பெயரும் நிலம் அபகரித்தோர் பட்டியலில் உள்ளது.இந்து முன்னணி நிர்வாகி: பனியன் தொழில் அதிபரும், இந்து முன்னணி நிர்வாகியுமான "இவர்' திருப்பூரில் வசித்து வருகிறார். திருப்பூரை சுற்றியுள்ள விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அபகரித்துள்ளதாக கூறி இவரையும் பட்டியலில் சேர்த்துள்ளனர் திருப்பூர் போலீசார். தவிர, திருப்பூர் நகர தி.மு.க., நிர்வாகி ஒருவரின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


வீரபாண்டியார் குடும்பம்: சேலம் மாவட்டத்தில் நிலம் அபகரித்தோர் பட்டியலில் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 12 பேரை கொண்ட இப்பட்டியலில் வீரபாண்டியார் குடும்பத்தில் மட்டும் 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சேலம் போலீசார் தெரிவித்தனர்.

கல்லூரி அதிபர்: தனியார் கல்லூரி அதிபர் ஒருவர், 300 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட பிரமுகர்கள் உள்பட மொத்தம் 35 நபர்களின் பெயர் விபரங்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் மட்டுமே இதுவரை 60 பேர் நிலம் அபகரிப்பு புகார் கொடுத்துள்ளனர். நிலம், சொத்துக்களை பறிகொடுத்தவர்கள் அச்சமின்றி தைரியமாக, அந்தந்த மாவட்ட போலீசில் புகார் அளிக்கலாம். நிலம் அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 400 பேரின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நபர்களை, சம்பந்தப்பட்ட எல்லைக்குரிய போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் "ஹிஸ்ட்ரி ஷீட்'டில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்து, செயல்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நபர்கள் மீண்டும் குற்றம் புரிந்தால் உடனடியாக கைது செய்யப்படுவர்.இவ்வாறு, ஐ.ஜி., தெரிவித்தார்.


"ஸ்பெஷல் செல்' அதிகாரிகள் யார்?நிலம் அபகரிப்பு தொடர்பான தகவல்களை திரட்டவும், புகார்களை விசாரிக்கவும் மாவட்ட போலீஸ் தோறும் "ஸ்பெஷல் செல்' (தனிப்பிரிவு) அமைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம்: "ஸ்பெஷல் செல்' பொறுப்பாளராக, மாவட்ட போலீஸ் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., மாரியப்பன் (மொபைல் போன் - 94454 92424), கூடுதல் பொறுப்பாளராக குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலம் அபகரிப்பு தொடர்பான தகவல்களை திரட்டவும், ரகசியமாக கண்காணிக்கவும் சப் - டிவிஷன் வாரியாக போலீஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷன் எல்லைக்குள் கண்காணிக்க சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் குமரவேல், மனோகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


பேரூர் சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், சிறப்பு எஸ்.ஐ.,மாயகிருஷ்ணன் தலைமையிலும், பொள்ளாச்சி சப்-டிவிஷனுக்கு சிறப்பு எஸ்.ஐ.,கள் பரமசிவம், செல்வராஜ் தலைமையிலும், வால்பாறை சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ., வெங்கடேசன், சிறப்பு எஸ்.ஐ., கதிர்வேல் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், நிலம் அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய விபரங்களை திரட்டி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு அனுப்புவர்.


திருப்பூர் மாவட்டம்: "ஸ்பெஷல் செல்' பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (மொபைல் போன்: 98422 87737) தலைமையில் எஸ்.ஐ., நிர்மலா, சிறப்பு எஸ்.ஐ.,கள் புகழேந்தி, ராஜேந்திரன், சிவசுப்ரமணி மற்றும் ஏட்டுகள், போலீசாரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம்: "ஸ்பெஷல் செல்' பொறுப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சக்ரவர்த்தி (மொபைல் போன் : 94454 91899) தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜயன், சிறப்பு எஸ்.ஐ., பாபுராவ் மற்றும் போலீசாரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஸ்பெஷல் செல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, June 30, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “TN Police "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் யார், யார்?”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...